உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவேக் மறைவு : பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

விவேக் மறைவு : பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் இரங்கல்
பிரதமர் மோடி டுவிட்டரில், ‛‛நடிகர் விவேக் அகால மரணம் கவலையை தருகிறது. அவரது நகைச்சுவையும் அறிவுப்பூர்வமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது இருந்த அக்கறை திரைப்படங்களில் பிரதிபலித்தன'' என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது : தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான விவேக்உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை (17.4.2021)) உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன்னுடைய ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற திரைப்படங்களில்
இவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு. பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணிகளில் அரசிற்கு உறுதுணையாக திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் “கிரீன் கலாம்” என்ற அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு, அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர்.

மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கலைத்துறையில் இவருடைய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசால் வழங்கப்படும் கலைவாணர் விருது மற்றும் சிறந்த நகைச்சுவை
நடிகருக்கான விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.

தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விவேக் அவர்களின் மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கும், ரசிக பெருமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

அன்னார் மறைந்தாலும், அவருடைய நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும். விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்
டுவிட்டர் கூறுகையில், ‛‛மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் விவேக் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.

பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார். விவேக் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

திமுக., தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்; பல்கலை வித்தகராக திகழ்ந்தவர் விவேக். தனித்துவமான நடிப்பாற்றலால் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டியவரை இவ்வளவு விரைவாக இயற்கை பறித்து கொண்டது. சின்னகலைவாணர் என பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் மறைவு பேரதிர்ச்சியை தருகிறது. இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் டுவிட்டரில், நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சின்ன கலைவாணர் என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை.

தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில், ‛‛கலைச்சேவையும், மக்கள்சேவையும் புரிந்திட்ட மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் #விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !