மன்சூரலிகானுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
நடிகர் மன்சூரலிகான் அவ்வப்போது எதையாவது செய்து தன்னை மீடியாக்களின் பக்கம் திருப்பிக் கொள்வார். அந்த வரிசையில் சமீபத்தில் நடிகர் விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் பிரச்சினை ஏற்பட்டதாக பேட்டி அளித்தார். அதோடு கொரோனா தடுப்பூசிகள் போலியானது என்றும் சொன்னார்.
கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் மன்சூரலிகான் மீது மாநகராட்சி ஆணையர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மன்சூரலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன்சூரலிகான் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இதை தொடர்ந்து அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படத்தி வரும் மன்சூரலிகானுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் மன்சூரலிகான் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.