என்னையும் இழிவுபடுத்தினார்: கிஷோர் கே.சாமி மீது ரோகிணி புகார்
பிரபல யூ டியூப்பர் கிஷோர் கே.சாமி. தனது யூ டியூப் சேனல் மூலம் அரசியில் விமர்சனம் செய்து வந்தார். அவ்வப்போது சினிமா குறித்தும், சினிமா நட்சத்திரங்கள் குறித்தும் விமர்சனம் செய்வார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க தலைவர்களை கிஷோர் கே.சாமி அவதூறாக பேசியதாகவும், பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சித்தாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிஷோர் மீது நடிகை ரோகிணியும் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மூலமாக நேற்று போலீஸ் கமிஷனருக்கு தனது புகார் மனுவை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு கிஷோர் கே.சாமி என்னை பற்றியும் எனது கணவர் ரகுவரன் பற்றியும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனு கீழ்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.