நடிகர், நடிகைகள் உதவி செய்ய வேண்டும்: பெப்சி தலைவர் வேண்டுகோள்
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தமிழக முதல்வரிடம் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதற்கான காசோலையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆர்.கே.செல்மணி கூறியதாவது: கொரோனா தொற்றின் முதல் அலையை விட இந்த முறை தான் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை திரைப்பட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். கடந்த முறை நடிகர், நடிகைகள் அதிக அளவில் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்த ஆண்டு குறைவாக இருக்கிறது. தற்போது லைக்கா நிறுவனம் கொடுத்திருக்கும் தொகைதான் அதிகமானது. நடிகர், நடிகைகள் இன்னும் உதவ வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தியேட்டர்களும் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்றார்.