7 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் வெளியாகும் 'மெட்ராஸ்'
 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் மீண்டும் தனது பெயரை முன்னணிக்குக் கொண்டு வந்த இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படம் 'மெட்ராஸ்'. 2014ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் வட சென்னையை மையமாகக் கொண்டு காதல், அரசியல், ஆக்ஷன், சென்டிமென்ட் என பல தளங்களிலும் சரியானதொரு படமாக அமைந்து ரஞ்சித்துக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுத்தது.
தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு அரசியல் படமாகக் கருதப்படும் இப்படம் 7 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் டப்பிங் ஆகி செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்த கார்த்தி, கேத்தரின் தெரேசா இருவருமே தெலுங்கில் ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள். இருந்தாலும் இந்தப் படம் இவ்வளவு வருடங்கள் கழித்து தெலுங்கில் டப் ஆகி வெளியாவது ஆச்சரியம்தான்.
'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடி தளத்தில் வெளியானதால் இந்தியா முழுவதும் உள்ள வேற்று மொழி ரசிகர்களும் அப்படத்தை ரசித்தனர். அதுவே, 'மெட்ராஸ்' படம் இப்போது டப்பிங் ஆவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.