தியேட்டர்கள், ஓடிடி, டிவி - கடும் போட்டியில் தமிழ் சினிமா
ADDED : 1497 days ago
கொரோனா முதல் அலை கடந்த வருடம் மார்ச் மாதம் பரவிய போது, தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி வந்த புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. அதன்பின் டிவிக்களிலும் நேரடியாக படங்களை வெளியிட ஆரம்பித்தார்கள்.
அந்த விதத்தில் குறுகிய காலத்தில் ஓடிடியில் அதிக படங்களை வெளியிடும் நடிகராக விஜய் சேதுபதி இடம் பிடிக்கப் போகிறார். தற்போது தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதிதான். அவரது படங்கள் எப்படி தியேட்டர்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்ற கவலை அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நிறையவே இருந்தது. நல்ல வேளையாக ஓடிடி தளங்களில் புதிய படங்களின் வெளியீடு நடப்பதால் அவரது சில படங்கள் தற்போது தப்பித்துக் கொண்டுள்ளன.
விஜய் சேதுபதி டாப்
விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம் படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளிவந்தது. அதன்பின் இந்த வருடத்தில் முதலில் அவர் நடித்துளள துக்ளக் தர்பார் படம் செப்டம்பர் 10ம் தேதி டிவியில் நேரடியாகவும், அன்றே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
அதற்கடுத்து அனபெல் சேதுபதி படம் செப்டம்பர் 17ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இதுவரை அவர் நடித்துள்ள இந்த மூன்று படங்கள் மூலம் ஓடிடி தளத்தில் அதிக படங்களை வெளியிடும் முன்னணி நடிகர் என்ற சாதனையை விஜய் சேதுபதி படைக்கப் போகிறார்.
விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள மற்றொரு படமான கடைசி விவசாயி ஓடிடி வெளியீடா, தியேட்டர் வெளியீடா என்பது விரைவில் தெரியவரும். இதனிடையே, அவர் நடித்துள்ள லாபம் படம் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதிக்கும் முன்னதாகவே அதிக பிரபலமில்லாத கதாநாயகனாக இருக்கும் வைபவ் நடித்து ஆர்கே நகர், லாக்கப், மலேஷியா டூ அம்னிஷயா ஆகிய மூன்று படங்கள் ஓடிடியில் வெளிவந்துள்ளன.
ஆர்யா நடித்து டெடி, சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு படங்கள் ஓடிடியில் வந்துள்ளன.
ஐஸ்வர்யா ராஜேஷ் டாப்
நடிகைகளைப் பொறுத்தவரையில் ஐஸ்வர்யா ராஜேஷ் “க.பெ.ரணசிங்கம், திட்டம் இரண்டு, பூமிகா(முதலில் டிவி அன்றே ஓடிடி வெளியீடு) ஆகிய 3 படங்களுடன் முதலிடத்தில் உள்ளார். நடிகை நயன்தாரா, “மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண்”, நடிகை வாணி போஜன் ‛‛லாக்கப், மலேஷியா டூ அம்னிஷயா ஆகியோர் தலா இரண்டு படங்களுடன் ஓடிடி வெளியீட்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
ஏற்கெனவே முன்னணி நடிகர்களான சூர்யா, தனுஷ், மாதவன், ஜெயம் ரவி ஆகியோர் நடித்த தலா ஒரு படம் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. சூர்யா நடிக்கும் ஒரு படம் உட்பட அவர் தயாரித்து வரும் நான்கு படங்கள் ஓடிடி வெளியீடு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர் வெளியீடு
தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன், கடந்த வாரம் முதல் திறக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாகத் திறக்கப்படாமல் உள்ளன. பெரிய நடிகர்களின் புதிய படங்கள் எதுவும் வராத காரணத்தால் தியேட்டர்களுக்கும் மக்கள் வரவில்லை என்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம், செப்டம்பர் 10ம் தேதி கங்கனா ரணவத், அரவிந்த்சாமி நடித்துள்ள தலைவி, ஆகிய இரண்டு படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அந்த சமயத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி களத்தில் டிவி, ஓடிடி
ஆனாலும், தியேட்டர்களுக்குப் போட்டியாக செப்டம்பர் 10ம் தேதி விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷிகண்ணா நடித்துள்ள துக்ளக் தர்பார் டிவியில் நேரடியாக வெளியாகிறது, அன்றே ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் செப்டம்பர் 10ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கடந்த வருடம் வெளிவந்த ஓடிடி படங்களின் எண்ணிக்கையை இந்த வருடம் வெளியான ஓடிடி படங்களின் எண்ணிக்கை இப்போதே தொட்டுவிட்டது. இந்த வருடத்தின் எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் மேலும் 20 படங்கள் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தயாரிப்பாளர்களுக்கு கை மேல் பணம்
தியேட்டர்களில் படத்தை வெளியிட்டு, அதை விளம்பரப்படுத்தி, அது ரசிகர்களுக்குப் பிடித்து, அவர்கள் தியேட்டர்களுக்கு வந்து படத்தைப் பார்த்து, தியேட்டர்காரர்களும் அவர்கள் வசூல் போக மீதியைக் கொடுத்து வாங்கும் லாபத்தை விட ஓடிடியில் ஒரே ஒரு நிறுவனத்திற்கு படத்தை வெளியிட்டு இந்தக் கையில் ஒப்பந்தம், அந்தக் கையில் பணம் வாங்கும் வழக்கம் தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஓடிடிக்கு மவுசு
இனி வரும் காலங்களில் தியேட்டர்களில் நாங்கள் வெளியிடவே இல்லை என்று முன்னரே அறிவித்துவிட்டு, ஓடிடி தளங்களுக்காக மட்டுமே முழுமையாக திரைப்படங்களைத் தயாரித்துக் கொடுக்கும் முறை வெற்றிகரமாக ஆரம்பமாகவும் வாய்ப்புள்ளது. பத்து, பதினைந்து வெப் தொடர்களை பத்து மணி நேரங்களுக்கும் மேலாகப் பார்க்கும் பொறுமை தமிழ் ரசிகர்களுக்கு இல்லை. எனவே, அந்த வெப் தொடர்கள் இடத்தை வெப் திரைப்படங்கள் பிடிக்கும் காலம் வரும்.
தியேட்டர் உரிமையாளர்களுக்கு சவால்
வரும் மாதங்களில் இன்னும் பல ஓடிடி வெளியீடுகள் வர உள்ளது. தியேட்டர்கள் ஒரு பக்கம் திறக்கப்பட்டிருந்தாலும் ஓடிடி வெளியீடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக வருகின்றன. அதோடு டிவியில் நேரடி வெளியீடு என்பதும் தியேட்டர்காரர்களுக்கு கடும் போட்டியாக வருகிறது. ஒரு பக்கம் கொரோனா பாதுகாப்பு, மறுபக்கம் ஓடிடி, டிவி வெளியீடுகள், இன்னொரு பக்கம் மக்களிடம் அதிக பணப்புழக்கம் இல்லாதது, இவற்றோடு குழந்தைகளின் படிப்பு எதிர்காலம் குறித்த கவலை, குடும்பப் பிரச்சினை இவற்றை மீறி மக்கள் தியேட்டர்களுக்கு எப்படி மீண்டும் வருவார்கள் என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
புதிய வழி என்ன
கடந்த பல மாதங்களாக தியேட்டர்களைத் திறக்காமல் காத்திருந்தார்கள் தியேட்டர்காரர்கள். ஓடிடி, டிவி என மக்கள் படங்களைப் பார்க்க மாறியுள்ள இந்த புதிய வழிகளைப் பற்றியும் அவர்கள் ஆராய வேண்டும்.
சாதாரண படங்களுக்கு, பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஏற்றபடியான டிக்கெட் கட்டணங்கள், வெளிமார்க்கெட்டில் என்ன விலை விற்கப்படுகிறதோ அதற்கேற்றபடியான உணவுப் பண்டங்களின் விலை, பார்க்கிங் கட்டணக் குறைப்பு என சில மாற்றங்களை எந்தப் பிடிவாதமும் பிடிக்காமல் அதிரடியாகக் குறைத்தால் மட்டுமே தியேட்டர்கள் மீண்டும் புதிய பொலிவுடன் உயிர்த்தெழும்.
இல்லையென்றால் ஓடிடியில் ஒரு மாதத்தில் வந்து விடுகிறது, டிவியில் நேரடியாக வந்துவிடுகிறது என அவற்றை ரசித்துப் பார்க்கும் அந்தக் குறிப்பிட்ட ரசிகர்களை அவர்கள் இழப்பார்கள். காலத்திற்கேற்றபடி, சூழலுக்கேற்றபடி தங்களை மாற்றிக் கொள்பவர்களே தடம் மாறாமல் முன்னேறிச் செல்வார்கள் என்பது பல தொழில்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது.