உலக புகழின் மகன், உலக அழகியின் கணவன்: அபிஷேக் பச்சனை புகழ்ந்து தள்ளும் பார்த்திபன்
பார்த்திபன் தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு படம் பரவலான பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது. இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். ஒரு கொலை குற்றவாளியின் லாக்அப் வாழ்க்கையை படம் சித்தரித்தது. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பார்த்திபன் கேரக்டரில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். அவரே படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. முதல் ஒரு வாரம் நடந்த நிலையில் தான் அபிஷேக் பச்சனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு மும்பை திரும்பினார். தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு சத்யா இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஒத்த செருப்பு ரீமேக் குறித்து இதுவரை பார்த்திபன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அபிஷேக் பச்சனை வானளாவ புகழ்ந்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: 6.3 உயரத்தில் ஒரு சிறுவன். இன்னும் உயரிய அப்பாவுக்குக் குழந்தை. உலகப் புகழுக்கு மகனாகவும், உலக அழகிக்குக் கணவனாகவும், தானிருக்கும் அனுபவத்தைத் தானியங்கி இயந்திரமாய் தட்டிவிட்டாரென்றால் ரசிக்கலாம்-மணிக்கணக்கில். முதலில் இப்படி ஒரு படத்தைத் தேர்வு செய்ததும், தானே தயாரிப்பதும் ரசனை. பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் மிஸ்டர். அபிஷேக் பச்சன். எனக்கு முதல் இந்திப் படம். பாதிப் படம் கடந்துவிட்டேன். என்று எழுதியிருக்கிறார். அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் அபிஷேக் பச்சன் இருக்கும் படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.