உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேரு வச்சாலும், வெக்காம.... பாடல் பிளாஷ்பேக் பகிர்ந்துள்ள இளையராஜா

பேரு வச்சாலும், வெக்காம.... பாடல் பிளாஷ்பேக் பகிர்ந்துள்ள இளையராஜா

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து 1990ல் வெளிவந்த படம் மைக்கேல் மதன காமராஜன். பல ஹிட் பாடல்கள் கொண்ட அந்தப் படத்தில் இருந்து பேரு வச்சாலும், வெக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலை சந்தானம் நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த டிக்கிலோனா படத்தில் யுவன் ஷங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருந்தார்.

ஒரிஜனல் பாடலைப் போலவே ரீமிக்ஸ் பாடலுக்கும் இந்தக் கால ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யு டியுபில் 11 மில்லியன் பார்வைளைக் கடந்துள்ளது இந்தப் பாடல்.

30 வருடங்களுக்கு முன்பு தான் இசையமைத்த அந்தப் பாடல் பற்றிய நினைவு ஒன்று வீடியோ மூலம் பேசியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த வீடியோவை யுவன்ஷங்கர் ராஜா பகிர்ந்துள்ளார். அதில், “பேரு வச்சாலும் வெக்காம போனாலும்....பாட்டு இருக்குல்லயா, மைக்கேல் மதன காமராஜன்ல...அதுக்கு நடந்த சம்பவம் ஒண்ணு இருக்கு. ரொம்ப தமாஷா இருந்தது. சிங்கீதம் சீனவாசராவும், கமல்சாரும் கம்போசிங்குக்கு உள்ள வந்து உட்கார்ந்துட்டாங்க. பலதுலாம் பேசிட்டிருந்தாங்க, பாட்டுக்கு டியூன் போட்டாச்சி. வாலி சாரைக் கூப்பிட்டு பாட்டு எழுத வைக்கிறப்போ, எல்லாரும் உக்காந்திருக்காங்க.

அவரு, என்னய்யா சந்தம்... போட்டிருக்கன்னு கேட்டாரு. டட்டாட டட்டாட்ட டட்டாட டட்டாட்ட....ன்னு...சொன்னேன். என்னய்யா, டட்டாட டட்டாட்ட...ன்னு போட்டிருக்கன்னாரு. ஆமாண்ணே,ன்னு சொன்னேன். இந்த மாதிரி சந்தம் கொடுத்தால் எப்படி எழுதறதுன்னு கேட்டாரு.

இதெல்லாம் ஏற்கெனவே எழுதுனதுதானேணே... சொன்னேன். ஏற்கெனவே யாருய்யா எழுதினாங்கன்னு கேட்டாரு. வள்ளுவர் எழுதிட்டு போயிருக்கால்லன்னு சொன்னேன். வள்ளுவரா, வள்ளுவர் என்னயா எழுதிட்டு போனாருன்னு, பதிலுக்குக் கேட்டாரு.

கமல் சாரும், சிங்கீதம் சீனிவாசராவும் என்னைப் பார்க்கிறாங்க. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் தூவும் மழை அப்படின்னேன். அடடா, என்னய்யா...ன்னு வாலி கேட்க, ஆமாண்ணா, இதான் சந்தம். சொன்னதும், அவரு பேரு வச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்னு எழுதினாரு.

டட்டாட டட்டாட்ட....துப்பார்க்குத் துப்பாய...அந்த அழுத்தம் வேணும்னான்னு கேட்டேன். அதனாலதான் பேரு வச்சாலும் வெக்காமன்னு... எழுதினாரு அவரு,” என அந்தப் பாடல் பிறந்த கதையை விளக்கியுள்ளார்.

திருக்குறளில் இருந்தே பாட்டிற்கான சந்தத்தை உருவாக்கிய இளையராஜா, அது பற்றி இத்தனை வருடங்கள் கழித்து சொல்லியிருக்கிறார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !