பிக்பாஸ் வீட்டில் திருநங்கை : ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு
தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். தமிழ் மக்களிடையே பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 மிக பிரம்மாண்டமான முறையில் நேற்று தொடங்கியது. இந்த முறை சினிமா பிரபலங்கள் உட்பட மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில், முதல் முறையாக திருநங்கை ஒருவரை போட்டியாளராக களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு. திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் உலக அளவிலும் இந்திய அளவிலும் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர் நமிதா மாரிமுத்து. நாடோடிகள் 2 படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளர்கள் கலந்து கொண்ட எபிசோடுகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தன. அந்த வகையில் தமிழிலும் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து கொள்வது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.