உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / வலது வசத்தே கள்ளன் (மலையாளம்)

வலது வசத்தே கள்ளன் (மலையாளம்)

தயாரிப்பு : ஷாஜி நடேசன்
இயக்கம் : ஜீத்து ஜோசப்
நடிப்பு : பிஜுமேனன், ஜோஜூ ஜார்ஜ், லேனா, இர்ஷாத், லியோனா லிசாய் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : சதீஷ் குறூப்
இசை : விஷ்ணு ஷியாம்
வெளியான தேதி : ஜனவரி 30, 2026
நேரம் : 2 மணி 18 நிமிடங்கள்
ரேட்டிங் : 3 / 5

இன்ஸ்பெக்டர் பிஜுமேனன் தவறு செய்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை தர மறுக்கிறார். பிரசவத்தில் அவரது மனைவி குழந்தையை பெற்று விட்டு இறந்து விட்டதால் தனது மகனிடம் வெறுப்பு முகம் காட்டி வளர்க்கிறார். மகனும் தந்தையை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான்தோன்றித்தனமான இளைஞனாக திரிகிறார். இந்த நிலையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் ஜோஜூ ஜார்ஜின் மகளும் சமூக சேவகியுமான வைஷ்ணவி காணாமல் போக பிஜுமேனனிடம் புகார் அளிக்கிறார் ஜோஜூ ஜார்ஜ்.

இதன் பின்னணிகள் தனக்கு வேண்டப்பட்ட செல்வாக்கான இடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இருப்பதை அறிந்து கொண்ட பிஜுமேனன், இந்த வழக்கையும் திசை திருப்ப முயற்சிக்கிறார்.. இதை தெரிந்து கொண்ட ஜோஜூ ஜார்ஜ் அந்த வழக்கின் குற்றவாளியை கடத்தி கொலை செய்து, பிஜுமேனன் மகனையும் இன்னொரு இடத்தில் கடத்தி வைக்கிறார். மேலும் இதை நேரடியாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, அவரிடம் இதுவரை நீங்கள் செய்த தவறுகளை எல்லாம் மீடியா முன்பாக ஒப்புக் கொண்டால் மகனை விடுவிக்கிறேன் என்று நிபந்தனை விதிக்கிறார் ஜோஜூ ஜார்ஜ்.

ஆனால் ஜோஜூ ஜார்ஜ் ஏற்கனவே விஷம் அருந்தியதால் அங்கேயே உயிரையும் விடுகிறார். இப்போது மகன் எங்கே இருக்கிறான் என விவரம் தெரியாமல் தனது போலீஸ் பவரை பயன்படுத்தி தேட ஆரம்பிக்கிறார் பிஜுமேனன். அவரால் மகனை கண்டுபிடித்து மீட்க முடிந்ததா ? அவர் செய்த குற்றங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்ததா ? என்ன நடந்தது என்பது மீதிக்கதை..

இயக்குனர் ஜீத்து. ஜோசப் படங்கள் என்றாலே கிரைம் மற்றும் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் தான் இருக்கும் என்பதை இந்த படமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கெட்ட போலீஸ் அதிகாரியாக பிஜுமேனன் படம் முழுவதும் இவரே ஆக்கிரமித்தாலும் கூட கிட்டத்தட்ட ஒரு எதிர்மறை வில்லனாகத்தான் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் பிஜுமேனன். அதற்கேற்ற மிகச் சரியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

படத்தின் பாதி அளவே வந்தாலும் படத்தின் நாயகன் என்கிற பெயரை தட்டி செல்கிறார் ஜோஜூ ஜார்ஜ். மகள் மீதான பாசம், மகளுக்கு ஏற்படும் பாதிப்பு கண்டு கலங்குவது, அதன் பின் அதற்காக நீதி கேட்டுப் பழிவாங்க திட்டமிடுவது என தன் பங்கிற்கு காட்சிகளை விறுவிறுப்பாக்கி கொடுத்திருக்கிறார்.

ஜோஜூ ஜார்ஜின் மனைவியாக பாசமான அம்மாவாக நடிகை லேனாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். பிஜுமேனனின் கீழ் வேலை பார்க்கும் காவல் அதிகாரிகளாக வரும் லியோனா லிசாய் மற்றும் இர்ஷாத் இருவருமே எதார்த்த காவலர்கள் உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு எப்படி கீழ்ப்படிவார்களோ அதை மிக செவ்வனே பிரதிபலித்திருக்கிறார்கள். பிஜுமேனனின் மகனாக வரும் கே.ஆர் ராகுல் பெற்றோரின் அரவணைப்பு அன்பு இல்லாமல் தான்தோன்றித்தனமாக ஒரு இளைஞன் எப்படி வளர்கிறான் என்பதை உணர்த்தும் கதாபாத்திரமாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்றாலும் கூட அலுப்பு தட்டாதவாறு அதை படம் பிடித்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் குறூப். காட்சிகளின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு விஷ்ணு ஷ்யாமின் இசையும் பக்கபலமாக நின்று இருக்கிறது.

ஜோஜூ ஜார்ஜின் மரணம் எதிர்பாராதது என்பதுடன் அதன்பிறகு கதை எப்படி நகர போகிறது என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறார். பிஜுமேனன் மகனை கண்டுபிடிப்பதற்காக அவர் கொடுக்கும் க்ளூக்கள் தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டதாக காட்டப்பட்டிருந்தாலும் லாஜிக்காக அதை ஏற்க முடியவில்லை. சமூகத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியில் போலீசாரின் முறையற்ற விசாரணையும் பாரபட்சமான நடவடிக்கையும் எந்த அளவுக்கு பக்க பலமாக இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

தப்பு செய்பவர்களுக்கு ஆதரவாக பணம் வாங்கிக்கொண்டு ஒரு போலீஸ் அதிகாரி செயல்படும்போது அது மேலும் மேலும் சமூகத்தில் பல தவறுகள் நடப்பதற்கு காரணம் ஆகிறது என்பதையும் அப்படிப்பட்ட அதிகாரியின் குடும்பத்திலேயே கூட அது நடக்கிறது என்பதையும் திருடன் வேறு எங்கேயும் இல்லை நம (வலது) பக்கத்திலேயே இருக்கிறான். என்று குற்றம் செய்பவர்களை சுட்டிக்காட்டும் விதமாக விறுவிறுப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

வலது வசத்தே கள்ளன் ; காக்கிச் சட்டையின் கிழிசலை தைக்கும் நியாய ஊசி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !