உள்ளூர் செய்திகள்

தாய் கிழவி

தயாரிப்பு : எஸ்.கே.புரடக்ஷன்ஸ், பேஷன் ஸ்டூடியோஸ்
இயக்கம் : சிவகுமார் முருகேசன்
நடிப்பு : ராதிகா, அருள்தாஸ், பாலசரவணன், சிங்கம்புலி, முனிஸ்காந்த், ரேச்சல்
ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
வெளியான தேதி : பிப்ரவரி 27, 2026
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 3.5 / 5

மதுரை மாவட்டம், காடுபட்டியில் வசிக்கும் பவுனுதாயி(ராதிகா) வட்டி தொழில் செய்து வருகிறார். அவர் வட்டி வசூலிக்க வருகிறார் என்றால் ஊரே பயப்படுகிறது. அப்படிப்பட்ட அதிரடிக்கு சொந்தக்காரர், திடீரென உடல்நலக்குறைவால் கிட்டத்தட்ட கோமா நிலைக்கு போக, மனஸ்தாபம் காரணமாக பக்கத்து ஊரில் வசிக்கும் 3 மகன்கள் அவரை பார்க்க வருகிறார்கள். மருமகன் உட்பட ஒட்டு மொத்த ஊரும் அவர் இறக்க வேண்டும். நாம நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். அப்போது நகை வியாபாரி இளவரசு மூலமாக பவுன்தாய், 160 பவுன் நகை சேர்த்து வைத்து இருக்கிறார் என்ற விஷயம் குடும்பத்துக்கு தெரிய வருகிறது. அதை கண்டுபிடிக்க மகன்களும், மருமகள்களும் ராதிகாவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து, நகை நட்டை விற்று, கடனை வாங்கி செலவழிக்கிறார்கள். ராதிகா உயிர் பிழைத்து வந்தாரா? அந்த நகை அவர்களுக்கு கிடைத்தததா? இதுதான் தாய் கிழவி படத்தின் கதை. புதுமுகம் சிவகுமார் முருகேசன் இயக்க, சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார்.

மதுரை பின்னணியில் பக்கா கிராமத்து படம், காமெடி நகரும் கமர்ஷியல் படம், உறவுகளின் வலியை சொல்லும் அழகான படம். பெண்களின் தன்னம்பிக்கையை, அவர்களின் பவரை பேசும் படம் என பலவகைகளில் தாய் கிழவியை வகைப்படுத்தலாம். அனைத்து பாணியிலும் சிறப்பாக அதை எடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் கருவும், திரைக்கதையும், சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களின் நடிப்பும் தாய் கிழவியை ஆரம்பம் முதல் கடைசிவரை வெகுவாக ரசிக்க வைக்கின்றன

தாய் கிழவியாக, பவுனுதாயாக வரும் ராதிகா ஓபனிங் முதல் கிளைமாக்ஸ்வரை தனது அனுபவத்தால் பண்பட்ட நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட தெனாவெட்டான, போல்டான, நக்கல் பிடித்த பாட்டிகளை நம் குடும்பத்தில், ஊரில் கண்டிப்பாக பார்த்து இருப்போம். அந்த கிராமத்து பெண்களுக்கே உரிய நடை, உடை, உடல்மொழியில் கலக்கியிருக்கிறார் ராதிகா. வழக்கமான பாசத்தை பிழியும், குடும்பத்துக்காக தன்னை வருத்தி, தியாகம் செய்யும் பாட்டியாக இல்லாமல் தைரியமான, முன் உதாரண பெண்ணாக அவர் கேரக்டரை உருவாக்கிய இயக்குனரை பாராட்டலாம். தனது கேரக்டரில் முக்கியத்துவம் உணர்ந்து பல சீன்களில் அசால்டாக நடித்து இருக்கிறார் ராதிகா. மேக்கப் கூட பக்காவாக செட்டாகி இருக்கிறது. மதுரை சீன் உட்பட பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார்.

அவரை தவிர, அவர் மகளாக வரும் கடைசி விவசாயி ரேச்சல், மகன்களாக வரும் அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன், மருமகள்களாக வரும் 3பேர், நம் ஊர்களில் பார்க்கும் மனிதர்களின் பிம்பங்களாக கலக்கி இருக்கிறார்கள். பென்னிகுயிக்காக வரும் முனிஸ்காந்த் காமெடி, அவரின் நடிப்பு படத்துக்கு பிளஸ். ராதிகா மருமகனாக வரும் முத்துக்குமார், பேரன், பேத்தி, டாக்டர்கள், ஊர் மக்கள், அந்த போலி பூசாரி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், அனைவரின் கேரக்டருக்கும் முக்கியத்துவம். அவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏகப்பட்ட கேரக்டர் இருந்தாலும் படம் தொய்வு இல்லாமல் செல்கிறது.

கிராமத்து பின்னணி, அந்த மண்ணின் மைந்தர்கள், கிண்டல் வசனங்கள், நகைச்சுவை பகுதிகள், வம்பு, தும்பு என மதுரை மண்மணத்தை அழகாக பதிவு செய்தது படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம். ராதிகா 2வது மகனாக வரும் சிங்கம்புலி தீவிர கமல் ரசிகராக இருக்கிறார். அதனால், படத்தில் ஏகப்பட்ட கமல் பாடல்கள், கமல் டச்சிங். அது, ரொம்பவே ஈர்க்கிறது. பாலசரவணன் சம்பந்தப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் சீன் மனதை உருக்க வைக்கிறது. ராதிகா பேரனாக வரும் சிறுவனின் வசனங்கள், சில செயல்கள் சூப்பர்.

அதேபோல், சின்ன, சின்ன சீன்களில் இழையோடும் நச் வசனங்கள், காமெடிதன்மையும் வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. விவேக் விஜயகுமார் கேமரா நம்மை மதுரைக்கே அழைத்து செல்கிறது. நிவாஸ் கே பிரசன்னா பாடல்களும், பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு உதவி செய்து இருக்கிறது. பழைய பாடல்களை ஆங்காங்கே பயன்படுத்தி இருப்பது எனர்ஜி

ஒரு கிழவியின் கதை என்று ஈஸியாக கடந்துவிட முடியாது. அம்மாவின் 160 பவுன் நகைக்காக ஏங்கும் மகன்களின் கதை என்று தள்ளிவிட முடியாது. கிராமத்து பின்னணியிலான காமெடி படம் என்று நகர்ந்துவிட முடியாது. காரணம், பல சீன்களில் கிராமத்து மனிதர்களின் இயல்பை, குணத்தை இயல்பாக சொல்கிறார். தனியார் ஆஸ்பத்திரி சம்பந்தப்பட்ட சீனில் டாக்டர்களின் நல்ல குணத்தை காண்பிக்கிறார் இயக்குனர். கடைசியில், ராதிகா மகள் ரேச்சல் கேரக்டர் மூலம் பெண்கள் படிக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை சில டயலாக்குகளில் சொல்கிறார். ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும். சுயமாக வாழ வேண்டும் என்று சொல்கிறார். குறிப்பாக, ராதிகா கேரக்டர் கடைசியில் பேசும் வசனங்கள், அவர் சொல்கிற அட்வைஸ் பெண்களுக்கு வேத வாக்கு.

பெண்கள் சம்பாதிக்க வேண்டும். அதே சமயம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். யார் உதவியும் எதிர்பாராமல் புத்திசாலி தனமாக சேர்த்து வைக்க வேண்டும். அது பிற்காலத்தில் அவர்களுக்கு உதவும் என்று ராதிகா சொல்லும் கிளைமாக்ஸ் மெசேஜ் தாய் கிழவியை பல ஆண்டுகள் மனதில் நிற்கும் படமாக்குகிறது. அதேபோல் கொடுமைக்கார கணவன், வலி, வேதனையை பொறுத்துக் கொண்டு பெண்கள் இருக்க வேண்டாம். தேவைப்பட்டால் மறுமணம் செய்யலாம் என்ற புரட்சிகர சிந்தனையும் கவனிக்க தக்க வேண்டிய பெண்ணிய சிந்தனை.

ராதிகா சீன்களை அதிகரித்து இருக்கலாம். ஆஸ்பத்திரி சீன்கள் கொஞ்சம் தொய்வு என சில குறைகள் இருந்தாலும் பாட்டி கதை என்றாலும் அதை காமெடி கலந்த கமர்ஷியல் குடும்ப படமாக கொடுத்த வகையில், பெண்கள் பற்றிய பல விஷயங்களை, கேள்விகளை கேட்க வைத்த வகையில், கைதட்டி ரசிக்க வைத்த வகையில் இயக்குனர் சிவகுமார் முருகேசன் வெற்றி பெற்று இருக்கிறார். ராதிகாவுக்கு பல விருது நிச்சயம். படத்தில் அவர் சொல்லும் கருத்துகள் பெண்களுக்கு லட்சியம்.

தாய் கிழவி - உருவாக்குதல், காத்தல், அழித்தலுக்கு ஆண் தெய்வங்கள். பணத்துக்கும், படிப்புக்கும் பெண் தெய்வங்கள் ஏன் தெரியுமா? என்ற கருத்தை சொல்லும் தங்க சிந்தனை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

krishna, chennai
2026-02-27 21:28:41

நீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான படம் ..குடும்பத்தோடு பார்க்கலாம்