ரமணர் கொடுத்த பைரவர் பிரசாதம்
ADDED :2432 days ago
ரமணரை தரிசிக்க வெளியூரில் இருந்து பக்தர் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் ரமணரின் முன் தாம்பாளம் ஒன்றில் அல்வாவை வைத்து விட்டு வணங்கினார். நெய்யும், முந்திரியுமாக வாசனை மூக்கை துளைத்தது. அல்வாவையும், பக்தரையும் மாறி மாறி ரமணர் பார்த்தார். பக்தரும் அல்வாவை சாப்பிடும் வரை காத்திருந்தார். அப்போது நாய் ஒன்று ஓடி வந்தது. அல்வாவைக் கண்டதும் வாலை ஆட்டியபடி மகிழ்ச்சியுடன் முகர்ந்தது. சீ! சீ! என விரட்ட முயன்றார் பக்தர். பாவம்... விரட்ட வேண்டாம். அதுவும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் தானே! என்றார். இதையே தனக்கு கிடைத்த உபதேசமாக கருதிய பக்தர் விலகினார். நாயும் அல்வாவை சிறிதளவு கவ்விக் கொண்டு ஓடியது. பைரவர் பிரசாதம் என மீதி அல்வாவை அனைவருக்கும் கொடுத்து விட்டு சாப்பிட்டார் ரமணர்.