வெள்ளி கவசத்தில் பிரித்தியங்கிரா தேவி
தலைவாசல்: சங்கராஷ்டமியையொட்டி, காமநாதீஸ்வரர் கோவிலில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், மார்கழி தேய்பிறை அஷ்டமி, நேற்று, சங்கராஷ்டமியாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. ஐந்து வகை எண்ணெயால், திரளான பக்தர்கள் தீபமேற்றி பைரவரை வழிபட்டனர். அஷ்ட பைரவர்களுக்கும், தனித்தனியாக பூஜை நடந்தது. காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மதியம், அஷ்டபுஜ கால பைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து நடந்த மஹா தீபாராதனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வெள்ளி கவசத்தில் தேவி: உலக நன்மை வேண்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், யாக வேள்வி பூஜை, நேற்று நடந்தது. யாக குண்டத்தில், வற்றல் மிளகாய் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொட்டினர். மதியம், பிரித்தியங்கிரா தேவிக்கு, பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் தேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர். அதேபோல், அங்குள்ள, கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம், காலபைரவருக்கு, பால், மஞ்சள், தயிர், வெண்ணெய், நெய், தேன் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. பின், சந்தன காப்பு அலங்காரத்தில், காலபைரவர் காட்சியளித்தார்.