உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!

கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!

அரியும் சிவனும் ஒன்றே எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக வில்லிபுத்தூரார்  மகாபாரதத்தில் ஒரு நாடகக் காட்சியை படைத்துக் காட்டுகின்றார். கவுரவர்கள் பக்கம் சார்ந்த கர்ணனிடம் நாகாஸ்திரம் இருக்கிறது. அந்த நாகாஸ்திரத்தைப் பாரதப் போரில் அவன் பயன் படுத்துவானேயானால், அது அர்ச்சுனனைக் கொன்று விடும். அந்த  நாகாஸ்திரத்தை வெல்லக்கூடிய அம்பு, பாசுபதாஸ்திரம் ஆகும். அந்தப் பாசுபதாஸ்திரம்  கயிலையங்கிரியில் வீற்றிருக்கின்ற சிவபெருமானிடத்தில் மட்டுமே உண்டு.

அந்தப் பாசுபதாஸ்திரத்தைக் கயிலை நாதனிடம் பெற்று வந்தால்தான், பஞ்ச  பாண்டவர்களுக்கு பாரதப் போரில் வெற்றி கிட்டும் என்பது கண்ணனுக்கு நன்றாகவே  தெரியும். எனவே, பதின்மூன்றாம் நாள் போர் நடந்து கொண்டிருக்கும்போது, இரவோடு  இரவாகக் கண்ணன் அர்ச்சுனனைக் கயிலையை நோக்கி அழைத்துச் செல்கிறான். பயணத்தின்போது உணவு உண்ணாமையால், அர்ச்சுனன் சோர்ந்து விழுகிறான். எனவே,
அர்ச்சுனனுடைய பசியைத் தீர்க்க சோலையிலிருந்து காய், கனிகளைப் பறித்து வந்து  கொடுக்கிறான் கண்ணன். அதற்கு அர்ச்சுனன், ""கண்ணா! நான் தினமும் சிவ பூஜை  செய்யாமல் உண்ண மாட்டேன் என்பது உனக்குத் தெரியாதா?” என்கிறான்.

உடனே கண்ணன் பக்கத்திலுள்ள சோலைக்குள் சென்று சிவ பூஜை செய்வதற்குரிய  மலர்களை பறித்து வந்து, அர்ச்சுனனை சிவ பூஜை செய்யும்படி கூறினான். அதற்கு  அர்ச்சுனன், "தாம் சாளக்ராமத்தை எடுத்து வரவில்லை. எப்படி சிவ பூஜை செய்வது?  என்கிறான். அதனைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சி அடைந்தாலும், ""அர்ச்சுனா! அரியும் சிவனும் ஒன்றே என்பதை நீ அறிவாய்! பரிமளம் மிக்க மலர்களைக் கொண்டு என்னையே சிவனாக பாவித்து பூஜை செய்! அப்படிச் செய்தால், கயிலையங்கிரியிலுள்ள சிவபெருமானைக் காணும் போது, என் மேல் தொடுக்கப்பட்ட மாலையை அவர்  கழுத்தில் நீ காண்பாய்” என அறிவுறுத்தினான்.

""மருவரு கானகமலரினாலெமைப்
பொருவரு பூசனை புரிதியைய நீ
இருவரு மொருவரே யென்பதின்று போ
யருவரை யவனடியடைந்து காண்டியே ”

என்பது வில்லிபுத்தூரார் பாசுரம்.

அர்ச்சுனன், ஆகம முறைப்படி சிவனை சிந்தித்த வண்ணமாய் கண்ணன் மேல்  மலர்களைத் தொடுக்கின்றான். அர்ச்சுனன் ஏற்கெனவே வேத வியாசரிடம்  பாசுபதாஸ்திரத்தைப் பெறுவதற்குரிய மந்திரங்களை கற்றிருப்பதால், அம்மந்திரங்களை  உச்சாடனம் செய்து, பூஜை செய்கின்றான். அதன் பின் கண்ணன் பறித்து வந்த காய்,  கனிகளை உண்டு பசியாறுகின்றான்.

அர்ச்சுனன் கயிலையங்கிரியை அடைந்தவுடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றான். தான் கண்ணனை சிவனாக நினைத்து சூட்டிய மலர்கள் வாடாமல், வதங்காமல், சிவபெருமான் கழுத்தில் கிடந்ததைப் பார்த்துச் சிலிர்த்துப்போனான். அரி என்றும் அரன் என்றும்  இரண்டு பொருள் இல்லை; இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வருகிறான்  அர்ச்சுனன்.

அதனை வில்லிபுத்தூராழ்வார்

"கண்ணன் மேல் அணி மலரனைத்தும் காய்கனல் வண்ணன் மேற்காண்டலும் மனங்களிப்புறா எண்ணின் மேல் இரண்டென இலதென்று அவ்விறல் அண்ணல் மேனியும் புளகரும்பினான் அரோ என திட்பமாக அருளிச் செய்கின்றார்.

இந்த அற்புதச் செய்தியை நம்மாழ்வார்,

"தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும்  ஒருவரால் பேசக் கிடந்ததே

எனத் திருவாய்மொழியில் அருளிச்செய்கின்றார்.

"சிவனாய் அயன் ஆனாய்.... முனியே நான்முகனே முக்கண்ணப்பா.... அவாவறச் சூழ்  அரியே அயனை அரனை அலற்றி என்றெல்லாம் நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்.  பரம்பொருள், "ஒன்றே கடவுள் - உணர்வே பிரம்மம் எனச் சொல்வன நம்முடைய வேதங்களும் உபநிஷத்துக்களும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்து சமயத்தின்  ஏகத்துவத்தைக் காலங்கள் தோறும் வலியுறுத்தி வந்துள்ளனர். அப்படியும் பிற சமய வாதிகளும் நம்மில் சிலரும் குதர்க்கம் பேசி வருவதால், மகாகவி பாரதியார்.

"தெய்வம் பலபல சொல்லிப் & -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய் -& எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்.

எனப் பாடி முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !