பழநிக்கு நகரத்தார் காவடி யாத்திரை
ADDED :2129 days ago
காரைக்குடி: காரைக்குடி நகரத்தார்கள் நேற்று குன்றக்குடியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக காவடி ஏந்தி சென்றனர்.
செட்டிநாடு நகரத்தார் சார்பில் கடந்த 400 ஆண்டுக்கும் மேலாக பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு, காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், புதுவயல், பள்ளத்துாரை சேர்ந்த நகரத்தார் ஆண்டுதோறும், பழநிக்கு காவடி எடுத்து பாதயாத்திரைசெல்வது வழக்கம். நேற்று குன்றக்குடியில் ஒன்று கூடிய நகரத்தார்கள், சண்முகநாத பெருமான் கோயிலில் வைரம் பதித்த ரத்தின வேலுக்கு சிறப்பு பூஜை செய்தனர். வேல் எடுத்து செல்லும் வாகனங்களை தொடர்ந்து 400 க்கும் மேற்பட்ட காவடிகளை ஏந்தி பாதயாத்திரை சென்றனர். பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு நகரத்தார்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பிப்.,10ல் காவடி செலுத்துதல் நடக்கிறது.