சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி மகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு காப்பு கட்டப்பட்டு ரிஷப வாகனத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கும் காப்பு கட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அரவங்கிரி எனும் அரளிப்பாறை தண்டாயுதபாணி கோயிலுக்கு மயில் வாகனத்தில் புறப்பாடு நடந்தது.விழா சதுர்வேதமங்கலம் அம்பலக்காரர் காந்தி மற்றும் கோயில் பேஸ்கார் கேசவன் தலைமையில் நடந்தது. சிறப்பு பூஜைகளை உமாபதி சிவாச்சாரியார் செய்தார். விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பர். ஐந்தாம் நாளான மார்ச் 3ம் தேதி காலை 10:30 மணியில் இருந்து 11:11 மணிக்குள் ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 4 ம் தேதி இரவு கழுவன் திருவிழாவும், 7ம் தேதி மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10 ம் திருவிழாவான மார்ச் 8 ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. அன்றைய தினமே அரளிப்பாறை மஞ்சு விரட்டும் நடக்கிறது.