திருவண்ணாமலையில் மன்மதன் தகனம் இல்லாமல் முடிந்த வசந்த உற்சவ விழா
ADDED :2261 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மன்மதன் தகன விழா இல்லாமல், வசந்த உற்சவ விழா முடிந்தது.
ஊரடங்கால், மார்ச், 24 முதல், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுவாமிக்கு தினமும் ஆறு கால பூஜைகள் மட்டும் நடந்து வந்தன.இந்நிலையில், ஏப்., 27ல், கோவிலில் வசந்த உற்சவ விழா துவங்கி நடந்து வந்தது. நாள்தோறும், கோவில் இரண்டாம் பிரகாரத்தில் சுவாமி எழுந்தருளினார். நேற்று முன்தினம் நள்ளிரவுடன், வசந்த உற்சவ விழா முடிந்தது.மழை பெய்ய வேண்டி, விழா முடியும் நாள் நள்ளிரவு, மன்மதன் தகனம் எரிப்பு விழா நடக்கும். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், மன்மதன் தகனம் விழா இல்லாமல், வசந்த உற்சவ விழா முடிந்தது. மேலும், அய்யங்குளத்தில் நடக்கும் சுவாமி தீர்த்தவாரியும் நடக்கவில்லை.