தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்
மதுரை : மதுரை அழகர் கோவிலில், செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் நிலையில் நேற்று, தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி, அழகர் இறங்கினார்.
ஊரடங்கால், மதுரை சித்திரை திருவிழா நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், ஆகம விதிப்படி, முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள், அழகர்கோவில் கள்ளழகர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தன. காலை, 8:00 மணிக்கு கள்ளழகர் கண்டாங்கி பட்டு அணிந்து, எதிர்சேவை அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர்நிலையில் பச்சைப்பட்டு அணிந்து, தங்கக் குதிரை வாகனத்தில், காலை, 10:00 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளினார். மாலை, 4:30 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தார். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சிகள், www.tnhrce.gov.in இணையதளத்தில் ஒளிபரப்பானது.