கருப்பர் கூட்டத்தை கண்டித்து கோவிலை வலம் வந்து ஆர்ப்பாட்டம்
ADDED :1920 days ago
பல்லடம்: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்ட கருப்பர் கூட்டம் அமைப்புக்கு, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நேற்று, பல்லடம் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோவிலுக்கு முன், பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி, வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்தை எழுப்பியபடியும் கோவிலை வலம் வந்தனர். கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டம் அமைப்பு நிர்வாகியை கைது செய்ய வேண்டும். அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முருக பக்தர்கள், ஆன்மிக சிந்தனையாளர்கள், பெண்கள், மற்றும் சிறுவர் சிறுமியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.