திசை மாறிய நதி
ADDED :2045 days ago
கேரளாவிலுள்ள காலடியில் அவதரித்தவர் ஆதிசங்கரர். இவரின் தாயார் ஆர்யாம்பாள், அங்கு ஓடும் பூர்ணாநதியில் தினமும் நீராடுவார். இதற்காக வெகுதுாரம் செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் நடந்த களைப்பில் ஆற்றங்கரையில் ஆர்யாம்பாள் மயங்கி விழுந்தார். வீட்டுக்கு வர தாமதம் ஆனதால், தேடிச் சென்ற சங்கரர் தாயாரின் நிலை கண்டு வருந்தினார். இதற்கு முடிவு கட்ட எண்ணி சங்கரர் ஆற்றங்கரைக்கு ஓடினார்.
‘‘ பூர்ணா நதித்தாயே! என் தாயாரால் நடக்க முடியவில்லை. அதனால் ஊருக்குள் இருக்கும் என் வீட்டருகில் வா’’ என்று பிரார்த்தித்தார். அன்றிரவே திசை மாறிய நதி, காலடி ஊருக்குள் ஓடத் தொடங்கியது. திடீர் வெள்ளத்தால் அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன் சங்கரர் மீண்டும் கோயில் கட்டினார்.