உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராஜயோகம் தரும் ராசி விநாயகர்!

12 ராசியினரும் வழிபட வேண்டிய ராஜயோகம் தரும் ராசி விநாயகர்!

மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு இங்கு இடம் பெற்றுள்ளது.

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென பட்டதை எவர் தடுத்தாலும் தைரியத்துடன் செயல்படுத்தும் நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

ரிஷபம்:     சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானவர்கள். ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களது ஜாதகத்தில் மட்டுமே.  ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சம் கொண்ட ஸ்ரீவித்யா கணபதி.

மிதுனம்:  திறமை பல கொண்ட நீங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்படலாம்.  உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட, நீங்கள் வழிபட வேண்டியவர் கண் திருஷ்டி கணபதி.

கடகம் : வித்தகரான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானம், அசாத்திய ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் மற்றவரை வழி நடத்துவீர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள்
வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

சிம்மம் :    தைரிய குணம்மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித் திருமகள் துணையிருப்பாள்.  தலைமை பண்பு கொண்ட உங்களுக்கு என்றும் தன்னம்பிக்கை  குறையாது. அசாத்தியமான மனவலிமையுடன் எப்போதும் வெற்றியை ருசிக்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

கன்னி : மென்மை குணம் கொண்ட நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது, உங்களை வெல்ல யாராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் உச்சிஷ்ட கணபதி.

துலாம் : அயராத உழைப்பைக் கொண்ட நீங்கள் கொண்ட லட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டீர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

விருச்சிகம்: சுறுசுறுப்பான குணம் கொண்ட நீங்கள் ஓரிடத்தில் நில்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைக்காமல் வேலையை உடனுக்குடன் முடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். பரபரப்புடன் இயங்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.

தனுசு : குரு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் நேர்மை மிக்கவராக திகழ்வீர்கள். இக்கட்டான நிலையிலும் குறுக்கு வழியில் செல்லாத, அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் நீங்கள் வழிபாட வேண்டியவர் சங்கடஹர கணபதி.

மகரம் : சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் தியாகம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையால் இழப்பை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மனதை அடக்க கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

கும்பம் :    அனுபவ அறிவால் அடக்கி ஆள நினைப்பவர்கள். அறிந்திராத விஷயத்தையும் கூட தெரியாது என சொல்லமாட்டீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு முன்னேறி
வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்:    கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணம் உடையவர்கள். எல்லாரும் நல்லவரே என பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள் தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !