விநாயகர் போல் செயல்படுங்கள்! சத்குரு வாழ்த்து
கோவை:விநாயகரை போன்று புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் இருந்தால் ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ முடியும், என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்குரு வாழ்த்துச் செய்தி:விநாயகரின் பெரிய தலை, அதிக அறிவு, புத்திசாலித்தனத்தை குறிக்கிறது. விநாயகரின் புத்தி, கூர்மையாகவும் சமநிலையாகவும் இருக்கிறது. அப்படி இருந்தால் தடை என்பதே கிடையாது. அதனால் தான் விநாயகர், விக்னேஷ்வரன் (தடைகளை களைபவர்) எனவும் அழைக்கப்படுகிறார்.அனைவரும் புத்தியை கூர்மையாகவும், சமநிலையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தன்மையை நமக்குள் வளர்த்து கொள்வதற்காகத் தான் விநாயகரை வணங்குகிறோம். தற்போது கோரதாண்டவம் ஆடும் கொரோனா வைரஸால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் இருந்தால், வாழ்வில் எந்த சவால் வந்தாலும், அதை ஒரு வாய்ப்பாக மாற்றி, ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ முடியும்.இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.