சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் பூஜை
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், தேன் உள்ளிட்ட, 16 வகையான பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு, வெள்ளி கவசம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவ விநாயகர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி.,ரோடு, கடைவீதி, மகாத்மா காந்தி சாலை, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், கடைவீதி செல்வகணபதி கோவில், அன்னசாகரம் கோடிவிநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேரகணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று, விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.