சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகாராஜாவின் பிறந்த நாள் நவ.,13ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (நவ.,12) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீண்டும் மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 2020-2021 ஆண்டுகளுக்கான புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு சடங்கு நடைபெறும்.
முன்னதாக புதிய மேல்சாந்திகளுக்கான அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மறுநாள் 16-ந் தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்கள். தொடர்ந்து அதிகாலை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ம் தேதி நடைபெறும். மகரவிளக்கு பூஜை 2021ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி நடைபெறும். நவம்பர் 16ம் தேதி முதல் 2021 ஜனவரி 19-ந் தேதி வரையிலான அனைத்து தினங்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.