சிங்கவரம் கோவில் சொர்க்க வாசல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராஜன் தலைமை தாங்கினார். அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு முன்னிலை வகித்தார்.பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணி, அறவாழி, துணை தாசில்தார் வரலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் முகமது அசாருதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கட்டளைதாரர்கள், உபயதாரர்களை மட்டும் அனுமதிப்பது. சொர்க்க வாசல் திறந்த பிறகு மூலவர் சாமி தரிசனத்திற்கு பக்தர்களை சமூக இடைவெளியுடன் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.