10 மாதங்களுக்கு பின் குன்றத்து கோயிலில் தங்க ரதம்
ADDED :1742 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 மாதங்களுக்கு பின் நேற்று தங்க ரதம் உலா நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 20 முதல் பக்தர்கள் அனுமதியின்றி கோயிலில் கால பூஜைகள் மட்டும் நடந்தது. ஊரடங்கு தளர்வால் செப்.1 முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு பாலாபிஷேகம், அர்ச்சனை , உபய திருக்கல்யாணம் துவங்கியது. 10 மாதங்களுக்கு பின் நேற்று கோயில் சார்பில் தங்க ரதம் உலா வந்தது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளிய தங்கரதம் திருவாட்சி மண்டபத்தை சுற்றி வந்தது. இன்று (பிப்.12) முதல் பக்தர்கள் பணம் செலுத்தி தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர் என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.