உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோவில் புனரமைப்புப் பணி நிறுத்தம்

அகத்தீஸ்வரர் கோவில் புனரமைப்புப் பணி நிறுத்தம்

 பெண்ணாடம் - தீவளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் புனரமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த தீவளூர் கிராமத்தில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அஞ்சல்நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.போதிய பராமரிப்பின்றி நாளடைவில் கோவில் சுவர்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு கோவில் சிதிலமடைந்தது. இதனால் 50 ஆண்டுகளுக்கு முன் திருவிழா மற்றும் பூஜைகள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டு, கோவில் பூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கோவிலை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின், கடந்த 2012ல் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை புனரமைக்க 12 லட்சத்து 54 ரூபாய் நிதி ஒதுக்கி, புனரமைப்பு பணிகளைத் துவங்கியது.ஆனால் கோபுரம், பக்கவாட்டு சுவர்கள் மட்டுமே புனரமைக்கப்பட்ட நிலையில் மற்ற பணிகளை துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கோவில் மீண்டும் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தீவளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் புனரமைக்கும் பணியை மீண்டும் விரைந்து துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !