வரதராஜப்பெருமாள் வைகாசி விழா: வைகை ஆற்றில் இறங்கினர் அழகர்!
பரமக்குடி: எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலின் வைகாசித்திருவிழாவில், நேற்று முன் தினம் காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 2 மணிக்கு மேல் புஷ்பப்பல்லக்கில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் பெருமாள், கள்ளழகர் கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பல்வேறு மண்டகப்படிகளில் காட்சியளித்து மேலச்சத்திரம் அடைந்தார். நேற்று காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பரமக்குடி முக்கிய வீதிகளின் வழியாக வந்து மாலை 4 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். இரவு, நயினார் கோவில் ரோட்டின் வழியாக இரவு 1மணிக்கு வண்டியூர் அடைந்து சந்தனக்காப்பு சேவை நடந்தது. இன்று மாலை 7 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் அலங்காரமாகி மண்டூக மகரிஷிக்கு (தவளை உருவம்) சாபவிமோசனம் அளித்து இரவு அவதார சேவை நடக்கிறது. தொடர்ந்து கருட, அனுமார் வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் சேவை சாதிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையார் சிறப்பாக செய்துள்ளனர்.