உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி!

இன்று காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி!

அவரது பெயர் சொன்னாலே உடல் சிலிர்க்கும், கைகள் தன்னை அறியாமலே கும்பிடும். அவர் ஒரு ஞானக்கடல். அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. எண்ணற்ற மொழிகள் தெரியும், இதிகாசங்கள் அறிவார். சாஸ்திரம், ஆகமம், சங்கீதம், வியாகரணம், தர்க்கம், வேதாந்தம், மீமாமிசை, தேவாரம், திருவாசகம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருக்குறள் இப்படி அவர் அலசாத சப்ஜெக்டே இல்லை. இப்படி தவவாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் காஞ்சிப்பெரியவர். சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து பாதயாத்திரையாக நாடு முழுவதும் ஆன்மிகத்தைப் பரப்பியவர்.

பெரியவர் 68வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக 13.2.1907ல் பொறுப்பேற்றுக்கொண்ட போது அவருக்கு வயது 13.  மடத்தின் பீடாதிபதியாக இருக்க கூடியவர் சகல கலைகளிலும் வல்லவராக இருக்க வேண்டும் என்பது நியதி. இதற்காக 1909 மற்றும் 1910 ஆகிய 2 வருடங்கள் கும்பகோணம் சங்கர மடத்தில் தகுந்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இந்த பயிற்சிகள் அனைத்திலும் சிறப்பாக கற்றுத்தேர்ந்தார். ஆனாலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகா பெரியவரை நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அடிக்கடி வந்து ஆசீர்வாதம் பெற்று செல்வதினால், இவரால் தொடர்ந்து கல்வி பயில முடியவில்லை. எனவே மடத்தின் உயர் அதிகாரிகள் கும்பகோணத்தில் பெரியவர் தொடர்ந்து சரிவர பயில இயலாது என முடிவெடுத்து திருச்சியிலிருந்து  சேலம் செல்லும் வழியில் 50 கி.மீ. தூரம், முசிறியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள மகேந்திர மங்கலம் என்ற இடத்தை தேர்வு செய்தனர். ஒரு காலத்தில் வேத சாஸ்திரங்களில் மிகவும் தேர்ந்த பண்டிதர்கள் மகேந்திர மங்கலத்தில் வாழ்ந்திருப்பதே இதற்கு காரணம். இந்த மகேந்திர மங்கலத்தில் தான் பெரியவர் 1911 முதல் 1914 வரை தங்கி வேதம் மற்றும் பல கலைகளை பயின்றிருக்கிறார். மகா பெரியவர் தங்கி வேதம் பயின்ற அறை தற்போது ஒரு வழிபாட்டு தலமாக மகேந்திர மங்கலத்தில் மிகப்பழமையான திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் வணங்கப்பட்டு வருகிறது.

இவரின் நினைவுச்சின்னமாக காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கை கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 இன்று பெரியவரின் 119வது ஜெயந்தி விழா நடக்கிறது.

ஓரிக்கை வரலாறு: கணிகண்ணன் என்னும் சீடர் மன்னரால் நாடு கடத்தப்பட்டார். சீடரோடு குருவும் ஊரை விட்டு கிளம்பி விட்டார். அன்புக்குரிய பக்தர்களான குருவையும், சீடரையும் விட்டு பிரிய மனமில்லாமல், அவ்வூர் பெருமாளும் ஊரை விட்டுப் புறப்பட்டார். மூவரும் ஒரு ஆற்றங்கரைப் பகுதியில் ஓர் இரவு முழுவதும் தங்கிய இடமே ஓரிருக்கை(ஓர் இரவு இருக்கை) ஆகும். இச்சொல் மருவி ஓரிக்கை ஆகி விட்டது. பெருமாள் ஊரை விட்டுச் சென்றதை அறிந்த மன்னன் அதிர்ந்தான். மூவரிடமும் மன்னிப்பு கேட்டு மீண்டும் அழைத்துச் சென்றான். இப்படி தன் பக்தர்களை விட்டுக்கொடுக்காமல் அருள்பாலிக்கும் பெருமாள் தலமான இங்கு, காஞ்சிப்பெரியவர் தன்னுடைய சீடர்களுடன் 1955ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்து குருசீடர் உறவிற்குப் பெருமை சேர்த்தார்.

பக்தர்கள் விருப்பம்: பெரியவர் மீது பக்தி கொண்ட பக்தர்கள் அவரின் நினைவாக, ஓரிக்கையில் மணிமண்டபம் எழுப்பினர். 100 அடி உயர விமானம், நூற்றுக்கால், பாதுகா மற்றும் ருத்ராட்ச மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியவை இந்த மண்டபத்தில் உள்ளன. 150 அடி நீளம், 52 அடி அகலம் கொண்ட இம்மண்டபம் இரண்டு ஏக்கர் பரப்பு கொண்டது. தஞ்சை பெரியகோயில் போல, முழுவதும் கருங்கல்லால் அமைக்கப்பட்டது. கல்யானைகள், கல்சங்கிலிகள் என சிற்பவேலைப்பாட்டின் முக்கியத்துவத்தை காணமுடியும். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் முழுமையான கல்கோயில் கட்டப்படவில்லை. சிமின்டோ, கம்பியோ இங்கு பயன்படுத்தப்படவில்லை. சுண்ணாம்பு, கரும்புச்சாறு கலவையால் கற்கள் இணைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேல்பகுதியில் 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. 12 கல் வளையங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.காஞ்சிப்பெரியவர் சிலை வைக்கப்பட்டுள்ளபீடம்பளிங்குக் கல்லால் ஆனது. கூரைப்பகுதி ருத்ராட்சத்தால்அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோபுரவிமானம் 80 டன் எடை கொண்டது. விமானம் 16 துண்டுகளாகச் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வாசலில் பெரிய சிங்கம் உள்ளது. அதன் வாயில் உருண்டைக்கல் இருக்கிறது.

பெரியவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததால், மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. கோபுரத்தில் சிலைகள் வடிக்கப்படவில்லை. சந்நிதியின் முன் பெரிய நந்தி சிலை உள்ளது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட இக்கோயிலில் ஆதிசங்கரர் தன் சீடர்களுடன் காட்சி தருகிறார். முகப்புவாயிலில் இருசக்கரங்கள் உள்ளன.சிவபெருமான் நடனமிடும் பிரதோஷ தாண்டவ சிற்பம், பக்தர்கள் கவனத்தை ஈர்க்கிறது.

இருப்பிடம்: காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் சாலையில் 5கி.மீ., தூரம்.

திறக்கும் நேரம்: காலை8-12, மாலை4-8

போன்: 044 - 67274466, 92448 66606


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !