திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருப்புவனம்,: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாடல் பெற்ற தலம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம். இங்கு பங்குனி திருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புஷ்பவனேஸ்வரர் சவுந்தர நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்த பின் காலை10:20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியேற்ற வைபவத்திற்கு பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டன. 26ம் தேதி திருக்கல்யாணமும், 27ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. தினசரி அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர், குமார் பட்டர், முருகன் பட்டர், ஆகியோர் நடத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.