உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா நிறைவு

பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா நிறைவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா, சந்தன சேவையுடன் இன்று நிறைவடைகிறது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலையில் ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. ராமானுஜர் வருகைதந்த சிறப்புடைய இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு தொற்று காரணமாக, பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடந்தன. கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில், பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவையொட்டி, நேற்று முன்தினம், குதிரை வாகன உற்சவத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்து, திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்ளும் உற்சவம் நடந்தது. நேற்று சேஷ வாகன உற்சவம் நடந்தது. இன்று சந்தன சேவை சாற்றுமுறை தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !