அர்ச்சகர், பூசாரிகளுக்கு நிவாரண பொருட்கள்
ADDED :1581 days ago
ஓமலூர்: ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், நிலையான மாத சம்பளம் இன்றி பணிபுரியும் பட்டாச்சாரியார், பூசாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு, கொரோனா கால நிவாரணத்தொகை, 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்களை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவில், 10 கோவிலில் உள்ள அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகள், பணியாளர்களுக்கு, ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த விழாவில், கலெக்டர் கார்மேகம், தி.மு.க.,வின் சேலம் எம்.பி., பார்த்திபன் ஆகியோர், நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, இரு தாலுகாவில் உள்ள, 64 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளன. சேலம் அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவி, ஓமலூர் டி.எஸ்.பி., சங்கீதா பங்கேற்றனர்.