உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் 25ல் குண்டம் திருவிழா

மாரியம்மன் கோவிலில் 25ல் குண்டம் திருவிழா

மோகனூர்: வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, வரும் 25ம் தேதி குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. மோகனூர் யூனியன், எஸ்.வாழவந்தியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த தேர் பழுதடைந்ததால், பல லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் அமைக்கப்பட்டது. அதன் வெள்ளோட்டம் கடந்த 31ம் தேதி நடந்தது. தொடர்ந்து, கடந்த 14ம் தேதி தேர்த்திருவிழாவுக்காக, கம்பம் நட்டு காப்பு கட்டப்பட்டது. அதையடுத்து, தினமும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வரும் 24ம் தேதி இரவு தேர் திருவிழாவும், தொடர்ந்து, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 25ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜையும், தீக்குண்ட பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் உருளுதண்டம், அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மதியம் 1 மணிக்கு கொமராபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி, ஊர்வலமாக வந்து கோவில் முன், குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஜூன் 26ம் தேதி காலை 6 மணிக்கு கிடா வெட்டும், இரவு 7 மணிக்கு ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 27ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !