ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு கடவுள் வழிபாட்டில் இல்லாமல் இருப்பது ஏன்?
ஒரு சில தெய்வங்கள் இரு சக்திகளோடு இருப்பது தத்துவங்களின் அடிப்படையில் தான். இதனை இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையாக எடுத்துக் கொள்வது தவறு. மனிதவாழ்வில் கூறப்படும் மனைவி வேறு. தெய்வநிலையில் சக்தி என்பது வேறு. காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. நாம் வாழ்வதற்கு பூமியும், செல்வமும் தேவைப்படுகின்றன. இதனை இரு சக்திகளாக அதாவது தனது திறன்களாக விஷ்ணு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். ஒன்று ஸ்ரீதேவியாகிய செல்வம். மற்றொன்று பூதேவியாகிய பூமி. ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். நமது விருப்பம் சரியா தவறா என்று அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து பிறகு அதை அடைய முயல்கிறோம். விருப்பம், அறிவு, செயல் என மூன்றும் சேர்ந்தால் தான் ஒருவிஷயம் நிறைவுபெறும். இம்மூன்றும் முருகப்பெருமான் வடிவம். விருப்பம் என்னும் இச்சாசக்தி வள்ளி, அறிவு என்னும் ஞானசக்தி முருகன், செயல் என்னும் கிரியாசக்தி தெய்வானை. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தெய்வங்களுக்குரிய சக்தியை மனைவியாகச் சித்தரித்துள்ளனர். சக்தியைப் பெண்ணாக்கி வழிபடுவது நம் மரபு.