கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1450 days ago
மேலுார்: மேலுார் நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவாரக் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கோயில் முன் உள்ள ஓடையில் புனித நீராடினார். அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபட்டனர். ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இதை மூன்று முறை சுற்றிவந்து உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்பு தொட்டில் கட்டி வந்து முடிகாணிக்கை செலுத்தினர்.இதே போல் சோமகிரி மலையாடிவாரத்தில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்குஏற்றியும் வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அரிவாளை காணிக்கையாக செலுத்தினர். அன்னதானம்வழங்கப்பட்டது.