தஞ்சாவூர், கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் பொதுமக்களிடம் ஆன்மிக, தன்னம்பிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் வரும் அடுத்தாண்டு பிப்ரவர் மாதம் 3,4,5 ஆகிய தினங்களில் 125 ஆண்டு விழா ராமகிருஷ்ண மடம் சார்பில் கொண்டாடப்பட உள்ளது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சிகாகோவில் உரையாற்றி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்து தாயகம் திரும்பி 1897ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கும்பகோணத்துக்கு வருகை புரிந்து 3 நாட்கள் தங்கினார். அப்போது நகரின் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அளித்த வரவேற்புக்கு, பதிலுரை அளிக்கும் வகையில் குடந்தை போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில், சுவாமி விவேகானந்தர் "வேதாந்தத்தின் பணி" எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். குறிப்பாக எழுமின், விழிமின், குறிசாறும் வரை நில்லாது செல்மின் என்ற அவரது சொற்றொடர் கும்பகோணத்தில் தான் முதன் முதலில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது. சிகாகோ சென்று சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-ம் ஆண்டு வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் வருகை தந்து உரையாற்றிய போர்ட்டர் டவுன்ஹால் வளாகத்தை, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பார்வையிட்டார். இதில் கும்பகோணம் தி.மு.க.,எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் தமிழழகன், கும்பகோணம் ராமகிருஷ்ண, விவேகானந்த டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் சத்யநாராயணன், பாஸ்கர், பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் சென்ற பள்ளிகளின், செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. நகர மேல்நிலைப்பள்ளி செயலாளர் வேலப்பன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் தீபக் ரமேஷ், பாணாதுறை மேல்நிலைப்பள்ளி செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் கூறுகையில்: அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் ஸ்மரணானந்த மகராஜ், துணைத் தலைவர் கவுதமானந்த மகராஜ் வழிகாட்டலுடன் பக்தர்களின் பங்களிப்போடு கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றிய 125-ம் ஆண்டை முன்னிட்டு வரும் பிப்ரவரி 3,4 மற்றும் 5-ம் தேதிகளில் கும்பகோணத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திடவும், ஆண்டு முழுவதும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பக்தர்களுக்கான பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் நிர்வாக குழுவின் ஒத்துழைப்போடு விவேகாந்தரின் திருவுருவச்சிலை அமைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திட எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் கும்பகோணம் ரயில் நிலையம் மற்றும் பள்ளிகளின் நிர்வாகக்குழு மூலம் சுவாமி விவேகானந்தர் வருகையை நினைவு கூறும் விதமாக பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.