சபரிமலைக்கு பாத யாத்திரை: கவனமாக செல்ல அறிவுரை
கூடலூர்: கூடலூர் வழியாக சபரிமலைக்கு பாதை யாத்திரை செல்லும் கர்நாடக பக்தர்கள், வனப்பகுதி சாலைகளில் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கர்நாடகா ஐயப்ப பக்தர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, நடப்பு ஆண்டும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து, கோவிலுக்கு சென்று வருகின்றனர். அதில், சில கர்நாடக பக்தர்கள், நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர் வழியாக சபரிமலைக்கு பாதையாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். பக்தர்கள் கூறுகையில், தினமும், 35 முதல் 50 கி.மீ., நடை பயணம் மேற்கொள்கிறோம். இரவில், கோவில், சமூக கூடத்தில் தங்கி பயணத்தை தொடர்கிறோம் என, கூறினர். வனத்துறையினர் கூறுகையில், வனத்தை ஒட்டிய சாலையோரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் நடந்து செல்ல வேண்டும் என, கூறினர்.