கோவில்களில் ஆவின் நெய், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த உத்தரவு
ADDED :1544 days ago
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆவின் நெய், வெண்ணெய்யை மட்டுமே பயன்படுத்த, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது சுற்றறிக்கை:ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனர் அனுப்பிய கடிதத்தில், கோவில்களில் தயார் செய்யப்படும் பிரசாதங்கள், இதர தேவைகளுக்கு ஆவின் நெய், வெண்ணெய்யை கொள்முதல் செய்யும்படி கேட்கப்பட்டுள்ளது.எனவே, கோவில்களில் விளக்கேற்றவும், நிவேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை, ஆவின் நிறுவனம் வாயிலாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல, பிரசாதங்களை தயார் செய்ய, ஆவின் நெய், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஜன., 1 முதல், கோவில்களில் ஆவின் பொருட்களை தவிர, பிற தயாரிப்புக்களை பயன்படுத்த வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.