உலகளந்த பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவக்கம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் புறப்பாடு நடந்தது.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக முதல் பத்து நாட்கள் பகல் பத்து விழாவாக கொண்டாடப்படும். இவ்விழாவின் முதல் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 2:00 மணிக்கு திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி, மாலை 4:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி ஆலய பிரதட்சிணமாக வலம் வந்து பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார்.
பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக வரும் 12ம் தேதி இரவு பெருமாள் மோகன அலங்காரத்தில் சாத்துபடி, திருமங்கையாழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. மறுநாள் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜெட் கோலாகலன் மேற்பார்வையில் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.