உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை

தஞ்சாவூர்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கல் கருட சேவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து  விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இதில் நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.  மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து  கருடபகவானை சுமந்து வந்தனர். கருடபகவான் மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !