யாத்ரீகர்கள் இல்லாமல் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்காவில் நேற்று அதிகாலை யாத்ரீகர்கள் பங்கேற்பு இல்லாமல் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. நாகையை அடுத்த நாகூரில் பிரசித்திப்பெற்ற ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இத்தர்காவில் 465 வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக தர்கா சன்னதியில் சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் ஒமைக்ரான பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சந்தனக் கூடு ஊர்வலத்திற்கும், சந்தனம் பூசும் வைப்வத்தில் யாத்ரீகர்கள் பங்கேற்புக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு எளிமையான முறையில் சந்தனக் கூடு நாகையில் இருந்து புறப்பட்டு நாகூர் வந்தடைந்தது.நேற்று அதிகாலை 4.20 மணிக்கு தர்கா சன்னதியில், யாத்ரீகர்கள் இன்றி சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் தர்கா ஆதனகர்தாக்கள் 40 பேர் கலந்துக் கொண்டனர்.