குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள குழந்தை முத்துக்குமார சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் முருகனை, தங்களின் குழந்தையாக பாவித்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அறநிலைய துறை நிர்வகிக்கும், வடபழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும். இதை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிற்ப சாஸ்திர முறைப்படி, நுாதன கொடி மரம் நிறுவப்பட்டு, திருப்பணிகள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை யாகசாலை வளர்க்கப்பட்டு கணபதி, நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று, காலை 7:00 மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 10:00 மணிக்கு விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. குழந்தை முத்துக்குமார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. வடபழனி முருகன் கோவில் தலைமை சிவாச்சாரியார் செல்வம் தண்டபாணி தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாவில், வட பழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் லட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். அவர்களுக்கு, கும்ப நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேதபாராயணம், திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.