உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் மயான பூஜை: நாளை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

மாசாணியம்மன் கோவிலில் மயான பூஜை: நாளை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மயான பூஜை நேற்று அதிகாலை நடந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா பிப்., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை மயான பூஜை நடந்தது.அருளாளிகள், முறைதாரர்கள் அம்மன் சூலம் மற்றும் பூஜை பொருட்களுடன், ஆழியாற்று படுகையில் உள்ள மயானத்துக்கு வந்தனர். மயான மண்ணால் மாசாணியம்மன் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.அருளாளி, ஆற்றில் நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். எலுமிச்சை பழங்களால், அம்மன் பீடம் அலங்கரிக்கப்பட்டது. பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மன் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பம்பைக்காரர்கள், பக்தி பாடல் பாடினர்.எலும்புத்துண்டை வாயில் கவ்விக்கொண்டு, கையில் சூலாயுதத்துடன் அருளாளி, பக்தி பரவசமாக நடனமாடினார். அம்மன் சிலையில் இருந்து, ஒரு பிடி மண் எடுக்கப்பட்டது. நள்ளிரவு, 3:30 மணிக்கு பூஜை நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று, காலை, 7:30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது. நாளை, 17ம் தேதி காலை, 9:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை, அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !