அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா: குவியும் பக்தர்கள்
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மகா சிவராத்திரி விழா நடக்க உள்ளது. மாசி மாதம், அமாவாசைக்கு முன் வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும், அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாளை, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அதிகாலை, 5:00 முதல் மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கும். இரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூலகருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கும். இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில், நாளை இரவு பன்னிருதிருமுறை இசைக்கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சி, பரத நாட்டியம், சொற்பொழிவு என, பல்வேறு நிகழ்வு நடக்கிறது.