உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சிலைகளுக்காக டிஜிட்டல் அருங்காட்சியகம்!

கோவில் சிலைகளுக்காக டிஜிட்டல் அருங்காட்சியகம்!

சென்னை : தமிழக கோவில் சிலைகளை, ஆன்லைன் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்க, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோவில்களில் திருடுபோன மற்றும்வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பஞ்சலோக சுவாமி சிலைகள் 36; கற்சிலைகள் 265; மரச்சிலைகள் 73 என, 374 சிலைகளை மீட்டுள்ளனர்.வழக்கு விசாரணை நடப்பதால், நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. போலீசார் இந்த சிலைகளை, சென்னை திருவொற்றியூர், எழும்பூர்அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாத்து வருகின்றனர். இந்த சிலைகளை, பொது மக்கள் ஆன்லைன் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்கும் வகையில், சென்னை, ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், டிஜிட்டல்அருங்காட்சியத்தை உருவாக்கியுள்ளனர்.பொதுமக்கள், www.tnidols.com என்ற இணையதளம் வாயிலாக பார்க்கலாம். இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது:நம் நாட்டின் பொக்கிஷமான சிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். பழங்கால சிலைகள் குறித்து ஆய்வு செய்ய, புதிய மென்பொருள் ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். சிலைகள் மற்றும் கலை பொருட்கள் தொடர்பாக, பொதுமக்கள் எங்களை அணுகலாம். கோவில்களில் உள்ள அனைத்து சிலைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !