தேவி கருமாரியம்மன் கோவில் ஆண்டு விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தேவி கருமாரியம்மன் கோவிலில், 31வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின், 48வது ஆண்டு துவக்க விழாவும், தேவி கருமாரியம்மன் கோவிலின், 31வது ஆண்டு விழாவும் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை பவானி ஆற்றிலிருந்து கரகம் எடுத்து, அன்னபூரணி பேட்டை வழியாக அம்மன் சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6ம் தேதி காலை அம்மன் திருவீதி உலாவும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 8ம் தேதி காலை சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது. 13ம் தேதி காலை நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, திரிசூலம் எடுத்து தாரை தப்பட்டை முழங்க, சிவபெருமான் படி விளையாடி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இரவு சிவபெருமான் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, விசேஷ பூஜைகள் மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 15ம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு புறப்படுதலும், 16ம் தேதி பூண்டி மலை அடிவாரத்தில் அபிஷேக பூஜையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 17ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.