திரவுபதி அம்மன் கோவில் வசந்த விழா : துரியோதனன் படுகளம் விமரிசை
ADDED :1363 days ago
காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் வசந்த விழாவில், நேற்று காலை, துரியோதனன் படுகளம் விமரிசையாக நடந்தது.சின்ன காஞ்சிபுரம், கோகுலம் தெருவில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் வசந்த விழா, ஏப்ரல் 6ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு, இரவு கட்டை கூத்து நாடகம் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வேகவதி ஆற்றில் துரியோதனன் படுகளம் நேற்று காலை நடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்காக, மாலையில் நடந்த தீமிதி திருவிழாவில் பங்கேற்று தீமிதித்தனர். இன்று, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி ஏற்பாடை, திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.