ராமேஸ்வரம் கோயில் வீதியில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி
ADDED :1381 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரத வீதி சாலையில் டூவீலர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயில், பக்தர்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் 2013 முதல் நான்கு ரத வீதியில் வாகனங்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் ரத வீதியில் வாகன போக்குவரத்து இன்றி பக்தர்கள் அச்சமின்றி, எளிதில் நடந்து சென்று தரிசிக்கின்றனர். இந்நிலையில் கோயில் ரத வீதியில் குறிப்பாக கிழக்கு ரத வீதியில் சாலை இருபுறமும் ஏராளமான டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். தற்போதைய கோடை வெயிலுக்கு சாலை ஓரத்தில் இருக்கும் நிழலில் நிற்க கூட இடமின்றி பக்தர்கள் தவிக்கின்றனர். எனவே கிழக்கு ரத வீதியில் டூவீலர் பார்க் அமைக்க கோயில் அல்லது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.