திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முப்பழ பூஜை
ADDED :1518 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா நிறைவாக சுவாமிகளுக்கு முப்பழ பூஜை நடந்தது. கோயிலில் ஜூலை 4ல் துவங்கிய திருவிழாவில் தினம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடந்தது. திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக உச்சிக்கால பூஜையில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை முப்பழங்கள் படைத்தது பூஜைகள் நடந்தது. யானை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி அபிஷேகங்கள், பூஜை முடிந்து கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.