தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :1176 days ago
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். ஆடி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று, பக்தர்கள் குவிந்தனர். சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, தட்சணகாசி காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள், 64 வகை அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது.